Wednesday, January 9, 2013

ஆலயமணி

                   இவைகள் பேசினால்---ஆலயமணி

ஆலயமணி பேசுகிறேன்;
;
நாக்குடையோ னாக நானிருந்த போதிலும்
வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;

நாக்கில் வருபவைகள் நல்லன தருபவையாய்ப்
பார்க்காத காரணத்தால் பேச்சொழிந் திருந்தேன்நான்

பேசத் தெரிந்தவர்கள் பேச்செல்லாம் தீமையினை
வீசக் கண்டதல்லால் வேறு விளைச்சலில்லை;

நாவடக்கம் எங்குமில்லை; மாறாகப் பலபேரை
நாஅடக்கம் செய்கிறது; நடைமுறை உண்மையிது;

கேட்டால் செவிகைக்கும் கெட்டழிந்த சொற்கள்தாம்
நாட்டு மேடைகளில் நாட்டிய மிடுகிறது;

நாக்கிருந்தும் பேசாமை நல்லதென நானிருந்தேன்;
வாக்களிக்கச் சொல்லியெனை வம்பி லிழுத்துவிட்டீர்

பேச்சு வந்தவுடன் பெரியோ ரிடம்கேள்வி
வீச்செறி தல்தானே வாடிக்கைச் செயலாகும்;

என்னை உணர்ந்தவன்நான்; மண்ணை உணரவில்லை;
விண்ணை உணர்வமெனில் வெகுதொலைவு; எட்டவில்லை;

ஆறுகாலப் பூசை அன்றாடம் நடக்கிறது;
மாறுதலே இல்லாமல் மணியோசை கேட்கிறது;

என்நாக்கால் எனையேநான் அடித்துக் கொள்கின்றேன்;
மண்ணுளோர் போல மற்றவரை அடிப்பதில்லை;

ஆண்டாண்டு காலமாய் ஆலய மணியோசை
பூண்டுக்கும் புழுவுக்கும் மனிதர்க்கும் கேட்கிறது;

ஆண்டவன் இருப்பதையும் அவன்நம்மைக் காப்பதையும்
ஆண்டவன் பூசை பெறுவதையும் அறிவிப்பேன்;

எங்கே இருந்தாலும் எப்பணி செய்தாலும்
அங்கே இருந்தபடி வழிபடநான் ஒலிசெய்வேன்;

கேட்டவுடன் கைகூப்பி வணங்குவோ ரிருக்கின்றார்;
கேட்டாலும் கேட்காத மானிடரும் இருக்கின்றார்;

ஆண்டவனிடம் கேட்கின்றேன்!
எல்லாமாய் இருப்பவனே! எங்கும் திகழ்பவனே!
எல்லார்க்கும் மூச்சாய் இழையோடித் திரிபவனே!

என்னோசை கேட்டவுடன் உன்வாசல் தனைநாடி
மண்மீதில் பக்தியுள்ள மாந்தர் வருகின்றார்;

வருகின்ற மக்களைநான் படிக்கின்றேன்; அவர்க்குநலம்
தருகின்ற நீயவரின் தராதரம் பார்த்தாயா?

வேற்றுமைகள் கண்டுநெஞ்சம் வேகிறது; துன்பத்திற்(கு)
ஆற்றாமல் நாவசைப்பேன்; ஆலய மணியொலிக்கும்;

அய்யா எனக்கதறும் அவரை உதைத்துவிட்டுப்
பய்யவே வந்துசெய்வார் பாலாபி ஷேகங்கள்;

செல்வத்தாற் குளிப்பாட்டிச் செல்வாக்கால் விசிறிவிட்டுன்
நல்லருளை நாடிப் பலபேர் வருகின்றார்;

பட்டாடை மேனிப் பளபளப்பில் உன்பார்வை
கெட்டா போய்விடும்? கண்திறந்து பார்த்தாயா?

நடக்கும் நாடகங்கள் என்னெஞ்சைக் குத்திடவே
இடிப்பேன்நான் இருபக்கம்; அதுதான் மணியோசை;

கோயில் நாடிவரும் அடியவர்காள்! இறையருளின்
வாயில் எதுவென்று மனத்தளவில் அறிவீரா?

மணியோசை கேட்டதும்கை கூப்புகிறீர்; எளியவர்கள்
மனவோசை அறியாமல் மாதேவன் அருள்வருமா?

வஞ்சத்தை விதைத்துவிட்டு அறுவடை காணுங்கால்
கெஞ்சி  யழுதாலும் கடைத்தேற வழிவருமா?

நாள்தோறும் கெட்ட வழிநடந்து மேல்போகும்
நாள்வருங் காலத்தில் நைந்தழுதால் நலம்வருமா?

உலகத்தைக் கண்டுங்கள் உளக்கோணல் தாங்காமல்
பலவகையில் கதறுமென் மனவோசை மணியோசை.
;



No comments:

Post a Comment