Wednesday, January 9, 2013

தீபம்

                          இவைகள் பேசினால்---தீபம்

திருக்கோயிற் கருவறைக்குள் தெய்வத்தோ டுறவாடி
இருக்கும்  தீபம்நான்; இதயத்தைக் காட்டுகிறேன்;

எனக்கும் வாயுண்டு; வயிறுண்டு; ஏற்றுங்கால்
கணக்காக எரிகின்ற சுடராகும் நாக்குண்டு;

என்வயிற்றில் எண்ணெயூற்றி இடுதிரியை வைத்துத்
தன்குறைகள் தீர்க்க என்முகத்தில் நெருப்புவைப்பார்

தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;
பாவம் என்னுணுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?

இருட்டுக் குடியிருக்கும் இடத்தில் வேறெந்தப்
பொருட்டும் இறைவன் புலப்படவே மாட்டான்;

திருக்கோயிற் கருவறையின் தெய்வத்தை வணங்குங்கால்
இருக்கின்ற இருட்டைப் போக்கவே நானெரிவேன்;

நானளித்த ஒளியால் நல்லறையின் இருட்டுப்
போனதென்ன வோஉண்மை; பக்தர் நிலையென்ன?

இதயமே இன்றித்தான் பலபேர் வருகின்றார்;
இதயமெலாம் இருட்டாகப் மீதிப்பேர் வருகின்றார்;

அய்யோ எனஅலறி என்நாவை ஆட்டுகின்றேன்;
பய்யவே காற்றில்நான் ஆடுவதாய் நினைக்கின்றார்;

கோயிலுக் குள்ளேனும் குப்பைகளை அகற்றிவிட்டுத்
தூய்மை யுளத்தோடு தொழுதல் கூடாதா?

உள்ளத்துக் குப்பைகளை ஒன்றாகக் கொண்டுவந்து
கள்ளத் துடன்தொழுதால் கடவுள் மகிழ்வாரா?

தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;
பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?

எனக்குள்ளும் சாதிவகுப் பிருக்கிறது; அதனாலே
பிணக்குகள் வருவதில்லை; போராட்டம் நடப்பதில்லை;

குத்துவிளக் காய்நிற்பேன்; கோலஎழிற் சரவிளக்காய்ச்
சத்தமின்றித் தொங்கிடுவேன்; சின்னத் தீபமாவேன்;

பஞ்சமுக விளக்காவேன்; பரமனையே நோக்கிநின்று
அஞ்சுபுலன் தனையடக்கி யாள்கவெனக் காட்டிநிற்பேன்;

முகம்பலவே கொண்டும்நான் ஒருமுகமே காட்டுகின்றேன்;
முகமொன்றைக் கொண்டவரோ பலமுகங்கள் காட்டுகின்றார்;
             (வேறு)
இறைவனொடு மிகஅருகில் நாளும் உள்ள
   என்னெஞ்சம் அவனிடமோர் வரமே கேட்கும்;
குறைநெஞ்சம்; கொள்ளிமனம்; கெடுதல் செய்யக்
   குதிக்கின்ற பாவியுள்ளம்; இவற்றை யிங்கே
இறைவன்முன் பலரறியச் சுட்டிக் காட்ட
   எனக்காற்றல் தரச்சொல்லி வேண்டு வேன்நான்;
தரங்கெட்ட பாவிகளின் கையால் என்றன்
   திரியெரிதல் என்னாலே தாங்க வில்லை;

கோயிலுக்குள் மந்திரத்தைச் சொல்லு கின்ற
   குருக்களுளங் கூடஅங்கே இணைவ தில்லை;
வாயசைந்து மந்திரங்கள் சிந்தும்; அந்த
   மனிதரவர் சிந்தனையோ வெளியே மேயும்;
வாயிங்கே எனஅழைத்தே நாவ சைப்பேன்;
   வழிபாட்டில் என்னசைவை யார்தான் பார்ப்பார்?
தீயணைந்து போகாமல் எண்ணெ யோடு
   திரிசேர்ப்பார்; என்னுள்ளங் காண மாட்டார்;

என்வயிற்றில் எண்ணெயினைத் தாங்கிக் கொள்வேன்;
   இடுதிரியை நாவாக நீட்டி வைத்தே
என்நாவின் நுனியினிலே தீயை வைக்க
   எரிகின்றேன்; என்வயிறோ எரிவ தில்லை;
என்கண்முன் சிலபேர்கள் வந்து நிற்பார்;
   இனிமையொடு திரியாகும் நாவு கொஞ்சும்;
எண்ணெயின்றி அவர்வயிறோ எரியும்; நாட்டில்
   இந்தவொரு கண்றாவிக் கென்ன செய்வேன்?
              -திருக்கோயிலூர்---01-05-82

No comments:

Post a Comment