Tuesday, November 5, 2013

அவளே மருந்து

                     அவளே மருந்து

உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; --என்றன்
   உடலும் உருகுது தாங்கவில்லை;
எண்ணமும் செயலுமே முடங்கிவிட-- என்றன்
   இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.

நெஞ்சுளே ஏதோ உடைகிறது; - என்
   நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;
பஞ்சென உள்ளம் பறக்கிறது -- எங்கோ
   போய்ப்போய் மீண்டும் வருகிறது.

கண்ணிலே ஒளியும் குறைகிறது; - காணும்
   காட்சிகள் குழம்பித் தெரிகிறது;
கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் - ஏதோ
   கொடிய வலியுடன் வதைக்கிறது.

பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் - எங்கோ
   பெரிய வைத்தியன் தேடுகிறாள்;
உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே - இங்கே
   உருகி உருகிப் பேசுகிறார்.

வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த
   நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?
வேதனை நான்பட மற்றவர்கள் - என்னை
   வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.

எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்
   எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?
எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை
   எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?

என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்
   இறகென நீவியே தரவேண்டும்;
என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த
   இளையவ ளேபிற மருந்தில்லை.

நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; - அந்த
   நோயெலாம் உலகில் வேறுவகை;
நோயிதைத் தீர்க்க மருந்தில்லை - இந்த
   நோய்தந்த அவளே நோய்மருந்து.

பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.
          புணர்ச்சிமகிழ்தல்--1102
  திருவள்ளுவர் இலக்கியமன்றம்
    நங்கநல்லூர்--08-07-06

No comments:

Post a Comment