Wednesday, November 6, 2013

பூக்கள் பேசினால்

                    பூக்கள் பேசினால்........

பூத்துள பூக்களின் மணத்தினிலே --நாளும்
   புத்துணர் வடைந்து திளைக்கின்றீர்;
பூத்துள இதழ்களின் எழிலினிலே --உள்ளம்
   பொங்கியே கவிதைகள் படைக்கின்றீர்;

எங்கள் இதழ்களில் காதலியைக் --கண்டே
   இதயக் களிப்பினில் ஆழ்கின்றீர்;
எங்கள் அசைவினில் அவள்நடனம் --கண்டே
   எங்கெங் கோபோய் வருகின்றீர்.

பெண்களைப் பூவினம் என்கின்றீர்; --முகப்
   பொலிவினைப் பூவிதழ் என்கின்றீர்;
கண்களை மலரெனச் சொல்கின்றீர் --மலர்க்
   கணையென மகிழ்வாய் ஏற்கின்றீர்.

பூக்களின் மேலழ குணரும்நீர் --உள்ளே
   பொதிந்துள அவலம் அறிவீரா?
பூக்களின் மென்மையைப் பாடும்நீர் --எம்மைப்
   பொடிசெயும் வன்மைகள் உணர்வீரா?

மலரெனில் மலர்ந்திடல் முதல்தகுதி --பின்
   மணம்பெறல் வாழ்வுப் பெரும்பகுதி
மலர்ந்துள மலரெலாம் பூமியிலே --நல்ல
   வாழ்வுப் பயன்பெறல் நிறைதகுதி.

எத்துணை மலர்கள் மலர்ந்தபயன் --பெற்றே
   இப்புவி போற்ற வாழ்ந்தனவாம்?
எத்துணை மலர்கள் இறைவனடி --பெற்றே
   இந்தப் பிறவியில் உயர்ந்தனவாம்?

பூத்தவை ஒருநாள் வாழ்க்கையுடன் --வாழ்வைப்
   பொசுக்கென முடிப்பதைக் காண்கின்றீர்;
பூத்தவை புயலின் வசப்பட்டே --பூத்த
   பொழுதே அழிவதும் பார்க்கின்றீர்.

ஒருநாள் வாழ்ந்து முடிகின்ற --எங்கள்
   உயர்வைப் பாடித் திளைக்கின்றீர்
ஒருநா ளேனும் மாலைசேர --நாங்கள்
   உளத்தவம் புரிவதைப் பாடுங்கள்.

மாலை சேர்ந்தால் பூத்தபயன் --இந்த
   மண்ணிற் பெற்றதற் குளமகிழ்வீர்!
மாலையே சேரா தந்தியிலே --நாங்கள்
   மண்ணைச் சேர்தற் கழுதிடுவீர்!
                19-08-07


No comments:

Post a Comment