Friday, December 13, 2013

திரும்பும் திசையெங்கும்

             திரும்பும் திசையெங்கும்

எத்திசையில் திரும்புவது?
   இருக்கின்ற திசையெல்லாம்
ரத்தத்தின் பீச்சல்கள்;
   நாராசக் கூச்சல்கள்;

சாதியென்ற பேரரக்கன்
   சதிராடக் காலடியில்
மீதியின்றி மக்களெல்லாம்
   மிதிபடுவார் ஒருதிசையில்;

நியாயத்தின் புதைகுழிமேல்
   அநியாயம் ஆட்டமிட
வியாபாரம் செழிக்கின்ற
   வித்தகங்கள் ஒருதிசையில்;

உள்ளத்தை மூடிவைத்தே
   உதடுமட்டும் திறந்துபேசிக்
கள்ளத்தை விலையாக்கும்
   கலைகற்றோர் ஒருதிசையில்;

நல்லவரைப் போல்நடித்து
   நடுமுதுகில் குத்துகின்ற
பொல்லாங்கில் அகப்பட்டுப்
   புலம்புகின்றோர் ஒருதிசையில்;

கன்னிகழி யாமலேயே
   கட்டழகு நைந்துபோகப்
பெண்ணென்று மூத்துநிற்கும்
   பிணங்களெல்லாம் ஒருதிசையில்;

திரும்புகின்ற திசையெங்கும்
   தில்லுமுல்லும் தீமைகளும்
நெருங்கிவழி மறிக்கையிலே
   நடப்பதுதான் எத்திசையில்?

எத்திசையில் திரும்புவது?
   எல்லாமே சிரிக்கிறதே!
எத்திசையும் திரும்பாமல்
   இருக்கத்தான் பழகுவோமா? 

No comments:

Post a Comment