Tuesday, December 24, 2013

கங்கைவேடன் காளத்திவேடனுக்கு (3)

        கங்கைவேடன் காளத்திவேடனுக்கு (3)

கங்கை நதியலை கடக்குந் தோணிகள்
   கணக்கில கொண்டவன்நான்--என்முன்
இங்கே பிறப்பலை கடக்குந் தோணியாய்
   இராகவன் நடந்துவந்தான்.

என்னைச் சோதரன் என்றவன் சொற்களில்
   இதயம் பறிகொடுத்தேன்--அந்த
வண்ணக் கோலவாய் வீழ்ந்திடும் சொற்களை
   வாரியே உண்டிருந்தேன்.

உன்னைப் போலவே நானும் உணவுகள்
   ஊட்டிட நினைத்துவிட்டேன்-- அங்கே
உன்னைப் போலவே கறியும் படைத்தேன்
   உணர்வுகள் இரண்டுமொன்றே!

அந்த உணவினை இராகவன் உண்டனென்
   ஆயினம் என்றுரைத்தான்-- உன்றன்
அந்த உணவினை ஏற்றவன் உனக்குநல்
   அற்புதப் பதமளித்தான்.

அன்பினைப் புரியா அடுத்தவர் சுளிப்பை
   அறிந்தவர் நாமிருவர்--தூய
அன்பினைப் போற்றி அணைத்தவ ரன்பை
   அணைத்தவர் நாமிருவர்.

இந்தத் தகுதியை எண்ணிப் பார்த்தே
   இம்மடல் துணிந்தெடுத்தேன்--வேறாம்
எந்தத் தகுதியும் எனக்கிலை கங்கை
   இருகரை திரிபவன்நான்

காளத்தி நாதன் கண்களே இன்று
   கண்ணப்பன் கண்ணலவோ--அந்தக்
காளத்தி யப்பர் அருள்மழை குளித்த
   கண்ணப்பர் நீயலவோ?

உள்ள மொடுங்கி உணர்வுக ளொடுங்கி
   ஒருமடல் வரைந்துவிட்டேன்--அன்பு
வெள்ள மெனவுள உன்னடி வைத்தே
   மெல்ல நழுவுகின்றேன்.
            தேனி--07-10-89




No comments:

Post a Comment