Sunday, September 16, 2012

Re;சவகர்லால் கவிதைகள்

                                                  மழலையர்
             ( ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
        சென்னை--13.11.07)
               கவியரங்கத் தலைமை

பெற்ற பொருளளவால் நாம்பெருமை யுற்றிடலாம்;
பெற்ற புகழளவால் நாமுயர்வை யெட்டிடலாம்;

பொருளளவும் புகழளவும் தருஞ்சிறப் போரளவே;
பொருள்பெற்றோர் புகழ்பெற்றோர் பெற்றோ ராவதில்லை;

சின்னக் கையசைவில் சிங்காரப் புன்னகையில்
வண்ணமுறக் குழந்தை வழங்குவதே அப்பதவி;

இந்திர லோகமாளும் அப்பதவி கிடைத்தாலும்
இந்தப் பதவிமுன்னே அப்பதவி தூசாகும்;

தத்தி விழுந்து தவழுமப் பிஞ்சுக்கே
எத்திசைச் செல்வமும் ஈடாகி நின்றிடுமா?

வாயொழுகும் நீர்குளித்தே வந்துவிழும் மழலைக்கே
போயெங்கும் ஈடொன்றைப் பார்க்க இயன்றிடுமா?

பூவிதழில் நெளிந்து புரண்டுவரும் புன்னகைக்கே
பூவுலகும் அந்தப் பொன்னுலகும் ஈடாமா?

எட்டி நடைபயிலும் இடையசைவின் எழிலுக்கே
கட்டிவைத்த நடனங்கள் கால்தூ சாகிடுமா?

மேல்விழுந்து புரண்டு வழங்குமந்த முத்தத்தை
மேலுலகப் பொன்மகளிர் வழங்கமிழ்தம் வென்றிடுமா?

செல்வத்தில் ஈடில்லா அச்செல்வம் பெற்றோரே
செல்வத்தைப் பெற்றோராம்; மற்றோர் பெறாதோர்;
குழந்தை
தொடரும் பரம்பரையின் சிறிய அணுத்துளி;
படரும் ஆலமரச் சந்ததியின் விதைக்கூறு;

தலைமுறையின் மகரந்தம் பரப்பும் ஒருகாற்று
தலைகளைத் தந்தையாக்கும் ரசவாதத் தொருகுளிகை;

பொருளற்ற வாழ்வைப் பொருளுற்ற தாக்கியோர்
பொருளாக்கும் அந்தப் பொருளுக் கீடேது?

கள்ளமிலாச் சிரிப்பு; களங்கமி லாக்கண்கள்
உள்ள மெலாந்தூய்மை எனவிளங்கும் தெய்வமது;

முந்நூறு நாள்சுமந்து பெற்றபெரு வேதனையைப்
பெண்ணவள் மறக்கச் செய்வதப் பிஞ்சுதானே!
;;;

No comments:

Post a Comment