Wednesday, September 19, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                              சுவைஞன்

எல்லோரும் கவிஞனென மிளிர்வ தில்லை;
   இணையில்லா ஒருகவிஞன் சிந்து கின்ற
எல்லாமே உயர்கவிதை ஆவ தில்லை;
   ஏட்டினிலே படைத்துவரும் கவிப டிக்கும்
எல்லோரும் நற்சுவைஞர் ஆவ தில்லை;
   இனியஉளம்; நற்பார்வை; அறிவுக் கூர்மை;
எல்லாமே இணைந்திட்ட சுவைஞர் கையில்
   இன்கவிதை கிடைத்திட்டால் அதுவே சொர்க்கம்.

கவிஞனவன் நினைக்காத சுவைக ளெல்லாம்
   கற்கின்ற சுவைஞனிவன் காட்டி நிற்பான்;
கவிஞனவன் படைத்திட்ட சொற்க ளேறிக்
   ககனத்தில் உலாவருவான்; ஆகா வென்றே
புவிநடுங்கக் கூச்சலிட்டே கூட்டஞ் சேர்ப்பான்;
   பார்த்துவந்த சுவையமுதைப் பலர்க்கும் ஈவான்;
கவியுள்ளங் கண்டுணர்ந்தே மகிழு மந்தக்
   கவிச்சுவைஞன் கவிஞர்க்குக் கிடைக்காப் பேறு.

ஒருகவிதை படிக்குங்கால் அதிலே எங்கோ
   ஓரிடத்தில், ஒருசொல்லில், சுவைகள் விஞ்சிப்
பெருகுவதை அவனுணர்வான்; கவிதைக் குள்ளே
   பிழைகாணும் கண்வீச்சை வீச மாட்டான்;
வரிசையிடும் சொல்லாட்சிச் சிறப்பைக் கண்டு
   மனமகிழ்ந்து திளைத்திடுவான்; அந்தப் பாட்டில்
சிரிக்கின்ற வழுக்களையோ, மயக்க மூட்டும்
   சொல்லடுக்கை யோஎன்றும் பொருட்ப டுத்தான்.

 

No comments:

Post a Comment