Tuesday, September 11, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                     கண்ணதாசன் ஒரு பொழில்
            (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
                     கண்ணதாசன் விழா--29-07-07 )
வானாகி விரிந்தவனைக் கவிதை யென்னும்
   மலையாகி உயர்ந்தவனைக் கருத்து வெள்ளத்
தேனாறாய்த் தவழ்ந்தவனைக் களிப்பை யூட்டும்
   தென்றலாகி அணைத்தவனைக் கண்ணன் என்னும்
கான்மழையின் வெள்ளமோடிக் கலக்கும் ஆழக்
   கடலாகி ஆழ்ந்தவனைப் பொழிலாய்க் காட்ட
நான்தானா கிடைத்திட்டேன்? சோலைக் குள்ளே
   நுழைந்தாடச் சரியான குரங்கு தான்நான்.

மதுவுக்கும் போதைவரப் பாட்ட ளித்த
   மாமன்னன்; திரையுலகம் என்னு மந்த
மாதுக்கும் போதைவர ஆட்டு வித்த
   மயக்குமொழிப் பாட்டுவீச்சுக் காரன்; அந்த
மதிமயக்கும் கண்ணனையே மயங்க வைத்த
   மாமாயக் கண்ணதாசன்; அவனை யிங்கே
எதெதுவாக வோஆக்கிப் பார்க்கின் றோம்நாம்;
   என்கடனோ பொழிலாக்கிப் பார்த்தல் தானே;

வண்டாடும் மலர்ச்சோலை யென்றால் அங்கே
   வந்தாடும் தென்றலுக்குக் குறைவா? வாசம்
கொண்டாடும் மலர்க்கூட்டம் சேர்ந்தால் அங்கே
   குழைந்தாடும் மணத்திற்குக் குறைவா? கண்கள்
கண்டாடும் எழிற்சோலை நுழைந்தால் உள்ளம்
   களிக்கின்ற அழகுக்குக் குறைவா? பாட்டைக்
கொண்டாடி வென்றிட்ட கண்ண தாசக்
   குளிர்சோலைக் குள்மனசு குதித்தா டாதா?

பொழிலுக்குள் மணமலர்கள் மட்டுந் தானா
   பொலிந்திருக்கும்? வாழ்ந்துபார்த்த கண்ண தாசப்
பொழிலுக்குள் நுழையுங்கள்; முட்கள் மத்தி
   பூத்திருக்கும் ரோசாக்கள் உமையே ஈர்க்கும்;
எழில்பொங்கும் ரோசாவைத் தொட்டால் உங்கள்
   இளவிரலைக் கூர்முட்கள் பதமும் பார்க்கும்;
அழகுவிஞ்சும் கண்ணதாசன் பாட்டுக் குள்ளே
   அகங்குத்தும் முள்ளிருக்கும் மறந்தி டாதீர்!

பாட்டுமகள் அவனிடத்தே தஞ்ச மாகிப்
   பைந்தமிழில் சந்தமென ஆடி நின்றாள்;
கேட்டவர்கள் செவிக்குள்ளே தேனாய்ப் பாய்ந்து
   கிறுகிறுக்க வைத்திட்டாள் கவிதை நங்கை;
பாட்டுக்கென் றேபிறந்த மகனும் சந்தப்
   பாட்டணங்கும் தமிழ்ச்சோலை தனிற்கு லாவக்
கூட்டுக்குப் பிறந்தவெல்லாம் கொள்ளை இன்பம்
   கூட்டுகின்ற தமிழ்ப்பாடற் சேயின் கூட்டம்

மணம்நிறைந்த மலர்பூத்த தன்மை யாலும்,
   வண்டுகட்குத் தேனீந்த பெருமை யாலும்,
மணம்பரப்பும் தென்றலங்கே தவழ்வ தாலும்,
   மனங்கவரும் சிட்டுக்கள் திரிவ தாலும்,
கணங்களென அரம்பையர்கள் ஆட லாலும்,
   கந்தர்வர் போலிசைஞர் இசைப்ப தாலும்,
குணமூட்டும் பொய்கையலை தவழ்வ தாலும்,
   கொள்ளைகொண்ட பாட்டுமகன் சோலை யேதான்

எப்போதும் மலர்க்கூட்டம் நிறைந்த ஒன்றே
   இனியபொழில் என்றிட்டால் கவிஞர் தன்னை
எப்போதும் எவ்விடத்தும் மலர்கள் மத்தி
   இனியமுறை பார்ப்பதனால் பொழிலே என்றால்
தப்பில்லை; அவர்முகமே அன்ற லர்ந்த
   தாமரைதான்; வாயசைவோ இதழ்க ளேதான்
ஒப்பின்றிப் பாடுமவர் இசையைக் கேட்டால்
   உலகுமகிழ் குயிலுக்கும் நாணம் தோன்றும்.

இவனைப்போல் உயிருடனே இருக்கும் போதே
   இரங்கற்பாப் பாடியவன் யாரு மில்லை;
இவனைப்போல் தன்வாழ்க்கைச் செய்தி யெல்லாம்
   ஒளிக்காமற் சொன்னவர்கள் யாரு மில்லை;
இவனைப்போல் யாரையுமே முழுதாய் நம்பி
   ஏமாந்தோர் யாருமில்லை; பொழிலென் றாலே
இவனைப்போல் ஒளிவுமறை வின்றி யார்க்கும்
   இனிமைதரும் பண்புடைய ஒன்று தானே. ,..   

No comments:

Post a Comment