Wednesday, September 19, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                                  கவிதை

எதுகவிதை எனச்சற்றே சிந்தித் தால்நாம்
   ஏதேதோ சொல்லிடலாம்; நெஞ்சுக் குள்ளே
மெதுவாக, இனிமையாக,ஆழ மாக
   மெல்லிசைபோல் நுழையவேண்டும்; பின்ன ராங்கே
மதுமயக்கம் நிகழவேண்டும்; கவிதைச் சொற்கள்
   வரிசைநட மிடவேண்டும்; கேட்போர் நெஞ்சுள்
அதுநுழைந்தால் நற்கவிதை; இல்லை யென்றால்
   அணிவகுத்த சொற்கூட்டம்;அவ்வ ளவ்வே.

பளிச்சென்றே ஒருமின்னல் தோன்ற வேண்டும்;
   பாதாளக் குகைக்குள்ளும் அதுபு குந்து
வெளிச்சத்தைப் பாய்ச்சவேண்டும்; கற்போர் நெஞ்சுள்
   விதம்விதமாய்ப் பலசுவைகள் மலர வேண்டும்;
கலகத்துப் பூண்டுகளை எரிக்க வேண்டும்;
   கற்பனையில் வானவில்லே தோன்ற வேண்டும்;
தெளிவாக உள்நுழைந்தே தெளிவைத் தந்து
   சுவைகூட்டும் ஒன்றேதான் கவிதை யாகும்.

ஏதோவோர் கிறுகிறுப்பை ஈய வேண்டும்;
   இதயத்தின் உட்புகுந்தே உணர்வைத் தட்டி
ஏதோவோர் கிணுகிணுப்பை ஒலிக்க வேண்டும்;
   இனம்புரியா இன்பஅலை உள்ளே வீசி
ஏதோவோர் மயக்கத்தை அளிக்க வேண்டும்;
   எடுத்துவைத்தே மறுபடியும் படிக்கத் தூண்டும்
ஏதோவோர் போதையினை ஊட்ட வேண்டும்;
   இன்பமூறும் மணற்கேணி நல்ல பாடல்.

நடப்பிலில்லாக் கற்பனைகள் மட்டு மின்றி
   நடப்பினையும் கவிதையுளம் காட்ட வேண்டும்;
இடுப்பசைவில் உயிரொடுங்கும் காதல் விட்டே
   இடுப்பொடியும் மங்கைதுயர் காட்ட வேண்டும்;
எடுப்பான மாளிகைகள் மட்டு மன்றி
   ஏழைமக்கள் குடிசையையும் காட்ட வேண்டும்;
அடுத்துநிற்கும் இரட்டைகளை நல்ல பாடல்
   அழகுறவே காட்டாக்கால் காண்பார் யாரே!
   

No comments:

Post a Comment