Sunday, October 27, 2013

யாரோ?

                        யாரோ?

இருளவித்துத் தலைதூக்குங் கதிரோன் தன்னை
   இதழவிழ்த்துக் கமலங்கள் நோக்கும் போழ்தில்
மருளவித்த ஒளிமுகத்தில் இரண்டு பூக்கள்
   மடலவிழ்த்தே எனைநோக்கக் காண்பேன்; பின்னற்
சுருளவிழ்த்த குழல்சரிய வாச லோடு
   சிறகவிழ்த்த என்னெஞ்சும் சேர்த்துக் கூட்டும்
தெருளவிழ்க்கும் மொழியாட்கு மணமாம்; அந்தத்
   தெவிட்டாத கனிக்குலையைச் சுவைப்பான் யாரோ?

உடல்தாங்கி நலிகின்ற இடையும், வண்ண
   உடைதாங்கி மிளிர்கின்ற உடலும், காமன்
படைதாங்கி எனைத்தாக்குங் கண்ணும், கூந்தற்
   பளுத்தாங்கி வளைகின்ற கழுத்தும், அன்னப்
பெடைதாங்கி அழகூட்டும் நடையும், வானிற்
   பிறைதாங்கி இவட்கீந்த நுதலும், கூட்டும்
இடர்தாங்கி இவள்தாக்கில் மகிழ்வேன்; அந்த
   இன்மொழிக்கு மணமென்றார்; உண்பான் யாரோ?

இடைதனிலே குடமேந்தி வாசல் தாண்டி
   எனைப்பார்வை தன்னாலே சீண்டிச் சன்னல்
இடைதனிலே என்கண்கள் காதல் வேண்டி
   ஏங்குகின்ற நிலைபுரிந்தே இதழின் ஓரக்
கடைதனிலே குறுநகையை நெளிய விட்டுக்
   கதுப்பினிலே செவ்வானப் புதுமை கூட்டி
நடைதனிலே எனைக்கொன்று போடு மந்த
   நங்கைக்கு மணமென்றார்; நுகர்வான் யாரோ?

மணம்நாடி, மலர்ந்துள்ள பூவை நாடி,
   மதுநாடி, அதுதருமவ் வின்பந் தன்னை
மனம்நாடி, மலர்தனையே சுற்றும் வண்டின்
   மனதொடிய அம்மலரைப் பறிப்பார் போலத்
தினம்நாடிப் பார்வையிலே இன்பங் கண்டு
   திளைத்தோடித் திரிந்திட்ட என்றன் உள்ளம்
நிணம்நாடிப் பெறும்வண்ணம் எழிலார் அந்த
   நேரிழைக்கு மணமென்றார், பெறுவான் யாரோ?
                     30-03-60

No comments:

Post a Comment