Tuesday, October 8, 2013

tharaiyil olirum vinmeenkal

   தரையில் ஒளிரும் விண்மீன்கள்

விண்ணைப் பார்த்து வியக்கின்றோம்;
   மனதில் மகிழ்ச்சி அடைகின்றோம்;
மண்ணில் வாழும் அனைவருமே
   மீன்களை இரவில் ரசிக்கின்றோம்;
எண்ணிப் பார்த்தால் மகிழ்ச்சிக்கே
   என்ன காரணம் எனப்புரியும்.
விண்ணின் மீன்கள் சிந்துகின்ற
   வெளிச்சப் பூவே காரணமாம்.

மீன்கள் இல்லா வானத்தை
   மனதில் நினைத்துப் பாருங்கள்!
வானம் கருமிருட் போர்வையென
   வையம் நடுங்கக் காட்சிதரும்.
மீன்கள் தமக்கென ஒளிராமல்
   வானம் பூமி இவைகளுக்காய்
வானில் மின்னிப் பூப்பதுதான்
   மீனின் சிறப்புக் கடிநாதம்.

எத்தனை இளைஞர் இம்மண்ணில்
   ஒளிதரு மீனாய் வாழ்கின்றார்?
எத்தனை மனிதர் சமுதாயம்
   ஒளிபெற விளக்காய்ப் பூக்கின்றார்?
எத்தனை தலைவர் தொண்டருக்காய்
   இனிய ஒளியைத் தருகின்றார்?
அத்தனை பேரும் மண்ணுக்காய்
   ஒளிதரு மீனாய் ஆவாரா?

ஏதோ சோலை யோரத்தில்
   எங்கோ போற்ற ஆளின்றித்
தோதாய்த் தோன்றும் சூழலின்றித்
   துயர இருட்டுக் குகைநடுவில்
ஏதோ ஒருமீன் ஒளிர்வதையே
   உலகம் கண்டு போற்றிடுமா?
தீதே இன்றி அம்மீனின்
   திறத்தை வளர்த்தே ஒளிபெறுமா?

சூரியத் தாக்கில் மீன்களினம்
   சுடரும் ஒளியை இழப்பதுபோல்
வீரிய வறுமைத் தாக்குதலில்
   ஒளியிழப் பவர்கள் ஏராளம்;
யாரெவர் அவர்நிலை கண்டறிவார்?
   யாரெவர் அவர்கட் கொளிதருவார்?
யாரெவர் தந்து போற்றிடினும்
   அவர்கள் மின்னும் மீன்களாவார்.

எத்தனை அழகு பெண்களிடம்?
   எத்தனை ஒளியவர் கண்களிடம்?
அத்தனை அழகும் ஒளிர்கிறதா?
   அவைகள் விண்மீன் ஆகிறதா?
எத்தனை ஒளிகள் சிந்திடினும்
   ஏழைமைக் குளத்துப் பெண்மீனின்
அத்தனை ஒளியும் பெறுதற்கே
   யாரெவ ரிங்கே முன்வருவார்?

தேடித் தேடிப் பாருங்கள்;
   தேடுங் கண்கள் கண்டுணரும்;
நாடி யணைத்தே இளைஞருளம்
   நல்லொளி பெறவழி காட்டுங்கள்!
ஏடுகள் போற்றும் மீன்கூட்டம்
   இந்த மண்ணில் மிளிருவதைத்
தேடுங் கண்ணே கண்டிடலாம்;
   தேடாக் கண்கள் காணாவே!

No comments:

Post a Comment