Sunday, October 6, 2013

puthiya baarathathinaay vaa vaa

 புதிய பாரதத்தினாய் வா! வா!

பாரதி இழுத்த 'பாரத' மென்ன
   பாதியில் நிற்கிறதா?--புதிய
பாரதத் திளைஞர் படையை யழைத்துப்
   பதறிடக் காரணமென்?

அன்றைக் கழைத்தான் பாரதி; நாமோ
   இன்றைக் கழைக்கின்றோம்;--நமக்குப்
பின்னர் பேரன் அழைப்பான்; எந்நாள்
   பாரதம் புதிதாகும்?

இளைஞ ருள்ளார்; அவர்தம் நெஞ்சில்
   எழுச்சிகள் புதியஉள! --அவை
வளைந்து வளர்ந்தே முடத்தெங் காகும்
   மர்மமே புரியவில்லை.

எல்லாம் உள்ளன! எதுவுமே இல்லை!
   என்றவோர் முரண்பாட்டை--இங்கே
எல்லா இளைஞரும் காண்கிறார்--அவர்தம்
   இதயமே என்னசெய்யும்?

பாரத நிலத்தில் விளைத்திட மண்ணே
   பண்பட வேண்டாமா?--மண்ணில்
சீரதை விதைத்துச் சிறப்பினை அறுக்கத்
   திரண்டிட வேண்டாமா?

நல்லதே நாடி நல்லதே செய்யும்
   நல்லவர் படைவரட்டும்;--அவர்தாம்
வல்லவ ராகி வளமைகள் கூட்டும்
   வலிமைகள் பெருக்கட்டும்.

நல்லவை எவையெனத் தெரியா இளைஞரை
   நடப்பிலே காண்கின்றோம்;--அவர்
அல்லவை தம்மை நல்லவை யென்றே
   அணிவதைப் பார்க்கின்றோம்.

விலங்கினை அறுத்தே விடுதலை பெற்றநாம்
   விலங்குவே றணிவதுவா?--மனித
விலங்கெனத் திரிவோர் விலாவினை நொறுக்கியே
   வீழ்த்திட வேண்டாமா?

இளைஞரே எழுக! புதியபா ரதமே
   இங்குமை அழைக்கிறது--நாட்டுக்
களைகளை அழித்தே நலத்தினை விளைக்கும்
   கைகளைக் கேட்கிறது.

தடைகளை நொறுக்கு! தீயவை யனைத்தும்
   சருகென எரித்துவிடு! --எங்கும்
இடையினில் நில்லாப் பயணமே எடு!வுன்
   இதயத்துள் ஒளியேற்று!

புதியதோர் உலகம் படைத்திடப் புறப்படு!
   போரினில் தோள்தட்டு!--புதிய
விதிகளை எழுதிடு! மேலவர் கீழவர்
   வேற்றுமை நொறுக்கிவிடு!

வையகம் செழித்திடும் வழிவகை கையிலே
   மலர்ந்துள தறிந்திடுநீ! --என்றும்
வையகம் அறத்தினில்! மறத்தினை எறிந்திடு!
   வாழ்வினை நிறைத்திடுநீ!
              ---01-09-08-

No comments:

Post a Comment