Thursday, October 10, 2013

kambavannam

         கம்பவண்ணம்

எந்தவண்ணம் கம்பவண்ணம் என்று கேட்டால்
   ஏதுவண்ணம் நாமுரைப்போம்? படிக்குந் தோறும்
வந்தவண்ண மேயிருக்கும் சுவைகள் பொங்கி
   வழிந்தவண்ண மேயிருக்கும் திறத்தில் மூழ்கிச்
சொந்தவண்ண மேமறந்து கம்பன் காட்டும்
   சுவைவண்ண மாய்மாறித் திளைத்தே ஆடும்
விந்தைவண்ணம் கற்போரின் சிந்தை வண்ணம்;
   மேன்மைவண்ணம் கம்பவண்ணம் போற்று வோமே!

சொல்லிருக்கும் இடத்திலொரு சுவையி ருக்கும்;
   சுவையிருக்கும் சொல்லிலொரு சுகமி ருக்கும்;
வில்லிருக்கும் கையிலொரு விதியி ருக்கும்;
   விதியிருக்கும் வில்லிலொரு கதியி ருக்கும்;
கல்லிருக்கும் பெண்ணிலொரு கதையி ருக்கும்;
   கதையிருக்கும் கல்லிலொரு கனமி ருக்கும்;
சொல்லுக்குள் சொல்லாகச் சுவைகள் வைத்த
   சிற்பியவன் கம்பவண்ணம் சிறந்த வண்ணம்.

மோகவல்லி நடையழகு நடன மாகும்;
   முழுஅழகாய் நளினமுடன் வந்து தோன்றி
மோகமுள்ளில் பூத்துள்ள மலராய் வண்டை
   முனைந்திழுக்க ஆற்றுமுரை தேனே யாகும்;
தாகமெடுத் தோள்நெஞ்சம் பண்பில் பூத்த
   தனியறத்தின் தடாகத்தை நெருங்கி நின்று
தாகமுடன் சிந்துகின்ற உரையைத் தேனாய்த்
   தந்தமகன் கம்பவண்ணம் இன்ப வண்ணம்.

வாலியின்மேல் அம்பைமறைந் தெய்து வம்பாய்
   வாங்குகிறான் சொல்லம்பைச் சரம்ச ரம்மாய்;
கோலமிகும் அந்தஉரை வீச்சில் கம்பன்
   கொடியுயரப் பறக்கிறது; பின்ன ராங்கே
வாலியெனும் சிறியனவே சிந்தி யாதான்
   வதைபட்டும் அறமுதலை வணங்கி மைந்தன்
கோலமிகும் கைபற்றிக் கொடுக்கு மந்தக்
   காட்சியிலே கம்பவண்ணம் அருளின் வண்ணம்.

No comments:

Post a Comment