Saturday, October 12, 2013

gnaanam

            ஞானம்

ஞானி யென்றொரு சொல்படித் தேனவர்
   யாரெனத் தேடி நொந்துநின்றேன்---உயர்
ஞானம் நிறைந்தவர் ஞானிய ரென்கிறார்
   ஞான மென்றால் அதுவென்ன?

பச்சிலை யசைவில் திருவருள் நடனம்
   பார்த்துத் திளைப்ப தொருஞானம் --வீழும்
எச்சிலில் கூட இறைமுகங் கண்டே
   இதயங் களிப்ப தொருஞானம்;

படித்தவர் பாமரர் வேறுபா டின்றிப்
   பாசம் பொழிவ தொருஞானம் --இதயத்
துடிப்பெலா மிறையே! யாரெவ ரென்றிலை
   தொழுங்க ளென்ப தொருஞானம்;

இறையருள் தூதனா யிருந்திடு போதும்
   எளிமையைப் போற்றுத லொருஞானம் --தம்முள்
நிறைந்திடு மாயச் சித்தினை உதறி
   நெகிழ்ந்திடச் செய்வ தொருஞானம்;

இருப்பவர் யாருளம் இருப்பது என்ன?
   என்றறி திறமை ஒருஞானம் --அங்கே
இருப்பவர் தமக்குள் உடன்துயர் துடைத்தல்
   யார்க்கென அறிதல் ஒருஞானம்;

அரியும் சிவனும் வேறிலை ஒன்றென
   அறிந்து தெளிதல் ஒருஞானம் --அந்த
அரிசிவன் பேரால் கலகம் விளைப்பதில்
   அறிவிலை யென்ப தொருஞானம்.

மடமை போக்கி அறிவைப் பெருக்கவே
   மடங்க ளென்ப தொருஞானம் --நாட்டில்
மடங்கள் தனித்தனி யெனினும் வணங்கும்
   பரம்பொரு ளொன்றே எனல்ஞானம்.

இந்த ஞானம் உள்வரப் பெற்றோர்
   எங்குளர்? அவர்தாம் ஞானியரோ --என்றும்
அந்த ஞானி காலடி வீழ்ந்தே
   அறிவுத் தெளிவை அடைவேனா?
             --ஞானக்கிறுக்கன்--2006

No comments:

Post a Comment