Sunday, August 5, 2012

விடியலும் உண்டா ?

      விடியலும் உண்டா?

தவறுகள் நியாய மாகிச்
  சாதனை படைக்கும்; வென்ற
தவறுகள் ஊர்வ லம்போய்ச்
  சந்தியில் முழங்கும்; நீதி
கவலையே யின்றிக் கண்ணைக்
  கட்டியே தூங்கும்; இந்த
அவலமே நடப்பா யாகும்
  அவனியில் விடிய லுண்டா?

வேலியே பயிரை மேயும்
  வேதனை திகழும்; பெண்ணின்
தாலியே சுருக்காய் மாறிச்
  சாவினை நிகழ்த்தும்; கெட்ட
காலிகள் கூட்டுச் சேர்ந்தே
  காரியம் முடிக்கும்; நாளும்
போலிகள் வெல்லு மிந்தப்
  பூமியில் விடிய லுண்டா?

சத்தியம் குத்துப் பட்டுச்
  செத்திடும்; தர்ம மிங்கே
நித்தமும் வெட்டுப் பட்டே
  நடுங்கிடும்; நேர்மை நாட்டில்
சுத்தமாய்த் துடைக்கப் பட்டுத்
  துவண்டிடும்; நியாயம் நாளும்
கத்தியே ஒடுங்கும்; இந்தக்
  காசினி விடிய லுண்டா?

காந்திகள் நெஞ்சைப் பாவக்
  குண்டுகள் துளைக்கும்; வஞ்சம்
ஏந்திகள் நெஞ்சம் மாலை
  ஏந்தியே சிரிக்கும்; சூழ்ச்சி
மாந்துவோர் வாழ்க்கை நாளும்
  மகிழ்வினில் செழிக்கும்; தூயோர்
சாந்தியே இன்றி நையும்
  சகத்தினில் விடிய லுண்டா?
             -அமுதசுரபி தீபாவளி மலர்-92      

No comments:

Post a Comment