Thursday, August 30, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                      ஏனடி மறந்தாய்?

தென்றலும் வந்தது; தீங்குளிர் வந்தது;
  தேமலர்ச் சோலையில் பாடிடும்
வண்டினம் வந்தது; மலரினை மொய்த்தது;
   மயங்கிய பூக்களூம் ஆடிட
நின்றிசை பெய்தது; நீள்கதிர் மாய்ந்தது;
   நிரம்பின செவ்வொளி யெங்கணும்;
என்றனைக் கொன்றிட வந்தது மாலையும்;
   ஏனடி நீவர மறந்தனை?

பூங்குயில் வந்தது; புள்ளினம் வந்தது;
   பூத்திடு மலர்களும் சிரித்தன;
மாங்கனி யொன்றினைத் தீண்டிடும் அணிலெனை
   மாய்த்திடு வகையினில் நகைத்தது;
தாங்கிய ஆவலில் தாவிடு பார்வையில்
   தவித்திடு மென்னிலைக் கிரங்கியே
வீங்கிய மாலையும் வீழ்ந்தது; சோலையில்
   விரைந்திட ஏனடி மறந்தனை?

கார்முகில் வந்தது; களிமயில் வந்தது;
   களிப்பொடு தோகையை விரித்தது;
சீர்நடம் பயின்றது; சிந்தையைக் கொண்டது;
   சிந்திய பூவினப் பாயலில்
போரினைத் துவக்கியே பூஞ்சிறைச் சிட்டினைப்
   புல்லிப் புரண்டது ஆணிணை;
பாரினில் மாரன்கை ஓங்கிய வேளையில்
   பாவையே ஏன்வர மறந்தனை?

                      10--11--61
   
   ;
   

No comments:

Post a Comment