Sunday, August 5, 2012

சுதந்திரம்

                                சுதந்திரம்

கற்பனைச் சிறகின் மீதேறி--வானக்
  கருமுகிற் கூட்டம் கிழித்தெறிந்தே
அற்புதச் சுதந்திரக் கனவுகளில்--நம்
  அகங்கள் மிதந்திடக் கனவுகண்டோம்

கையில் சுதந்திரக் கனிபெற்றோம்--அதைக்
  கண்ணுற உருட்டிக் களிப்புற்றோம்
கையில் கிடைத்ததை வாய்சுவைக்க--அங்கே
  'கடக்'கெனப் பல்லுடை படுகிறது.

கனிக்குளே கல்லா? வியக்கின்றோம்!--ஆனால்
  கடைப்பல் உடைவதை உணர்கின்றோம்
இனிப்புள சுதந்திரக் கனிக்குள்ளே--ஊழல்
  எப்படிக் கல்லெனப் புகுந்ததுவோ?

கனிச்சுளை யெல்லாம் கல்லானால்--அந்தக்
  கனிபெறும் பெயர்வே றாகாதா?
கனிக்குளே கலந்துள கற்களையே--கழித்துக்
  கனியினைக் காத்திட வேண்டாமா?

சுதந்திரக் காற்றில் கிருமிகளாய்--ஊழல்
  கலந்திடக் கண்டும் பொறுத்திருந்தால்
சுதந்திர நாடே அழியாதா?--அதன்
  சுவாசக் காற்றுநஞ் சாகாதா?

காற்று வெளியெலாம் நஞ்சானால்--நம்
  கண்ணெனும் தாய்நா டழியாதா?
கூற்றுவ னாய்வரும் அந்நஞ்சை--நாம்
  கொன்று காத்திட வேண்டாமா?

இனியொரு சுதந்திரப் போராட்டம்-- இங்கே
  எழுந்துதான் நாடு பிழைத்திடுமா?
கனியினைக் குரங்குகைக் கொடுத்துவிட்டே--நாம்
  கதறினால் கனிகளே பிழைத்திடுமா?

சுதந்திர நாட்டுக் குடிமகன்கள்-- பிழை
  செய்திடா உணர்வே பெறவேண்டும்.
இதந்தரு நன்மை பெருகிடவே--தூயோர்
  இங்குவந் தாட்சிகள் செயவேண்டும்.

சுதந்திரக் கனியைச் சுவைத்திடுவோம்--நாம்
  சொல்லொணாப் பெருமகிழ் வடைந்திடுவோம்
சுதந்திர நாட்டின் குடிகள்நாம்--என்றும்
  தூய்மை வாய்மை யுடன்வாழ்வோம். 

No comments:

Post a Comment