Sunday, September 29, 2013

vittu viduthalaiyaaki

     விட்டு விடுதலையாகி.........

விட்டு விடுதலை யாவெனத் திகைக்கிறேன்;
விட்டு விடுவ தெதையெனக் கேட்கிறேன்;

கட்டுப் படாது கட்டறுத் தலைந்ததைக்
கட்டில் வைத்த கட்டை விடுவதா?

ஆசை நெருப்பை அணைத்துக் கலந்த
ஆசைக் குளத்தின் அணைப்பை விடுவதா?

பாச உணர்வின் பரப்பை உணர்த்திய
நேசக் கொடியின் நினைப்பை விடுவதா?

கற்பனைச் சிறகாய்க் கவிதைப் பொருளாய்
நிற்பவ ளவளின் பிணைப்பை விடுவதா?

இன்பம் இதுவென இதய முணர்த்திய
இன்பக் கொள்முதற் களஞ்சியம் விடுவதா?

அன்பை விரிக்கும் அற்புதம் காட்டிய
நண்பர் கூட்டை நறுக்கென விடுவதா?

பல்வகைப் படிப்பைப் பல்வகை யுணர்வைப்
பல்வகை கொடுத்த பள்ளியை விடுவதா?

நல்லவர் அணைப்பை நவில்தொறும் இனிக்கும்
நல்லவர் உரையை நானே விடுவதா?

பாட்டில் இன்பம் பகிர்ந்ததை விடுவதா?
பாட்டா யாகிப் பயின்றதை விடுவதா?

வீட்டை விடுவதா? விட்டுப் பின்னொரு
காட்டை யடைந்து களிப்பிற் கலைவதா?

காட்டையும் விட்டுக் கண்முன் இன்பக்
கூட்டையும் விட்டுநான் கொள்ளை போவதா?

சொர்க்கமே இதுவெனக் காட்டிய வீட்டைப்
பொக்கென விட்டுப் பாவியாய்ப் போவதா?

கட்டில் இருப்பதே சுகமெனக் கொண்டபின்
கட்டென் செய்யும்? விடுதலை என்செயும்?

காற்றுக் குதிரையில் வான்வலம் வரலாம்;
ஆற்றிக் கொள்வது வீட்டணைப் பன்றோ?

துடிப்பும் தவிப்பும் அலைப்பும் நெரிப்பும்
நொடிப்பும் சலிப்பும் நோயாய்ப் பற்ற

அனைத்தும் விட்டு விடுதலை யாகி
நினைத்து மகிழ விடுவது வீடே;

அதைநான் விடுவதா? அதையேன் விடுவது?
வதைநான் படவா? வீட்டைநான் விடவா?

விட்டு விடுதலை யாக மறுக்கிறேன்;
விட்டு விடுவ தேனெனக் கேட்கிறேன்.
   -திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
        நங்கநல்லூர் --05-09-07

No comments:

Post a Comment