Monday, September 2, 2013

I இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

                    இவைகள் பேசினால்--
        சிங்கவாகனம் பராசக்தியிடம்

தாயே! பராசக்தி! தனிக்கருணை மாமழையே!
வாய்திறந் தழுவோரை வாரி யணைப்பவளே!

பெற்றவளும் நீதானே! பிள்ளைகள்யாம் பெருந்துன்பம்
உற்றக்கால் எமைத்தாங்கி உதவுவதும் நீதானே!

யாராட்சி பீடத்தில் அமர்ந்தாலும் உன்னுடைய
சீராட்சித் திறந்தானே செகமெல்லாம் காக்கிறது;

உன்னுடைய கண்மேகம் அருள்பொழிய வில்லையெனில்
மண்ணில்  உயிரெல்லாம்  வாடிக்  கருகாதா?

மண்ணைத் தாங்குகின்ற மாகாளி! பராசக்தி!
உன்னைத் தாங்குவதால் உயர்வுபெற்ற சிங்கம்நான்;

வீரத் திருக்கோலம் தாயேநீ எடுக்குங்கால்
சீரோ டுனைத்தாங்கிச் சிறப்போடு திகழ்பவன்நான்;

பாவத்தைச் சுமக்கின்ற பஞ்சைகளின் மத்தியிலே
தேவியைச் சுமப்பதனால் செம்மாந்து திரிபவன்நான்;

குள்ளநரி ஓநாய்கள் கொல்லும் புலிக்கூட்டம்
கள்ளமிலா மானினங்கள் எல்லாமென் காட்டிலுண்டு;

காட்டுக்குள் பேரரசைக் கட்டுக்குள் ஆண்டவன்நான்;
நாட்டுக்குள் உனைத்தாங்கி நாற்றிசையும் சுற்றுகிறேன்;

புதரை வீடாக்கி விலங்கினந்தான் வாழ்கிறது;
புதராக்கி வீட்டை மனிதஇனம் சாகிறது;

அன்றாடம் வருகின்ற அடியவர் செயலெல்லாம்
உன்கீழே இருக்கும்நான் ஒழிவின்றிக் காண்கின்றேன்;

சிங்கம்நான் என்நோக்கில் திசையெல்லாம் பார்க்கின்றேன்;
அசிங்கங்கள் தாமே அகமெல்லாம் தெரிகிறது;

நரிகண்டேன்; புலிகண்டேன்; நாய்கண்டேன்; உன்முன்னே
வருகின்ற கூட்டத்தில் மனிதரைத்தான் காணவில்லை;

தனக்கொருகண் போனாலும் சரிதான்; அடுத்தவன்
தனக்கிருகண் போகட்டும் என்பவர்தாம் ஏராளம்;

குப்பை நெஞ்சங்கள்; கோணல் நினைப்புகள்;
அப்பனுக்கும் அம்மைக்கும் அபிஷேகம் குறைவில்லை;

உள்ளத்தில் வஞ்சம்; உதட்டசைவில் தேவியின்பேர்;
கள்ளத் தொழுகையிலே சக்தியா மயங்கிடுவாய்?

ஏமாற்ற நினைத்தே ஏமாறி நெஞ்சத்தைத்
தாமாற்ற நினைக்காமல் தடுமாற்றம் கொள்கின்றார்;

சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்
அங்கங்க ளிருப்பதனால் அமைதியுட னிருக்கின்றேன்;

தப்புத் தாளம் சங்கீத மாகிறது;
தப்பாத தாளம் எங்கேயோ புதைகிறது;

தனியாக நேர்மை ஆவர்த்தனம் புரிகிறது;
இனிமை யுடன்கேட்க ஆளின்றிப் போகிறது;

நேர்மை வழிசென்ற பயணம் முறிகிறது;
நேர்மை யற்றவழிப் பயணம் தொடர்கிறது;

வஞ்சத்தை விதைக்கின்றார்; வளமைபயி ராகிறது;
நெஞ்சத்தை விற்கின்றார்; நல்லவிலை போகிறது;

வஞ்சத்தைப் பயிராக்கி வன்கொடுமை விளைத்தவர்கள்
மிஞ்சியதைக் காசாக்கி உண்டியலில் கொட்டுகின்றார்;

கொட்டி உண்டியலில் பணத்தைக் குவித்துவிட்டாற்
பட்டுப்போம் பாவமெனப் பாவம் நினைக்கின்றார்;

தள்ளும் படியளவே அவர்செய்த பாவங்கள்
தள்ளுபடி யாகுமென நம்பித் தள்ளுகின்றார்;

சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்
அங்கங்க ளிருப்பதனால் அமைதியா யிருக்கின்றேன்.
               --  --
                     சிவகாசி--16--07--82  


No comments:

Post a Comment