Saturday, September 14, 2013

with kannadasan

 [ 1972 ல் ஆ.தெக்கூர் மேனிலைப் பள்ளியில் 
            கவிஞர் கண்ணதாசன் தலைமையில் 
              நடந்த கவியரங்கம்.}
                 திறமை
    
தலைப்பிங்கே சரியில்லை என்று சொல்லித்
   தாவிக்கொண் டென்மனைவி அருகில் வந்தாள்;
தலைப்புனக்கும் பிடிக்கலையா? எஞ்சி நின்ற
   தலைப்பிதுதான்; என்னசெய்ய? என்றேன். உங்கள்
தலைவிதியா? யார்யாரோ கழித்துப் போட்ட
   தலைப்பினைஏன் எடுக்கவேண்டும்? என்று சேலைத்
தலைப்பிலுள்ள கிழிசலையே காட்டி நின்றாள்;
   சரிசரியிச் சங்கதியே வேறு; வேறு

கவியரங்கத் தலைப்பெனக்குத் 'திறமை' என்றேன்;
   கடகடெனச் சிரித்திட்டுச் 'சரிதான் இந்தப்
புவியினிலே இல்லாதார்க் கீதல் தானே
   புகழ்மிக்க கொடையாகும்; பொருத்தம்' என்று
செவியினிலே அறைந்தாற்போல் சொன்னாள்; சொன்ன
   சொல்லினிலும் தவறில்லை; திறமை இந்தப்
புவியினிலே எனைத்தவிர மற்ற எல்லாப்
   பொருள்விற்கும் வியாபாரி யிடத்து முண்டு.

கத்திரிக்காய் வாங்கிவரப் போனால் அந்தக்
   கடைக்காரன் என்னிடத்தே அன்பு கொண்டு
கத்திரிக்காய் நான்பொறுக்கித் தருவே னென்று
   கனியாகத் தந்திடுவான்; வீட்டில் சேர்த்தால்
கத்திடுவாள்; நறுக்கிடுவாள்; புழுவாய்க் கொட்டும்;
   'கடையினிலே கத்திரிக்காய் வாங்கக் கூடக்
கற்றிருக்க வில்லையிங்கே திறமை பற்றிக்
   கவிபாடிக் கிழியுமெனப் பாடித் தீர்த்தாள்;

நானென்ன செய்திடுவேன்? திறமை இன்று
   நாட்டினிலே பொதுவுடைமை ஆகிப் போச்சு;
தேனென்ற பேச்சாலே மயக்கி நம்மைத்
   தெளிவாக ஏமாற்றும் திறமை இந்த
மாநிலத்தில் எங்குமுண்டு; நமக்கே அந்த
   மாயத்தில் ஏமாறாத் திறமை வேண்டும்;
மாநிலத்தில் இதுமட்டுந் தானா? எல்லா
   வகையினிலும் திறமையிங்கே வெளிச்சம் போடும்.

அரசியலில் இத்திறமை கொண்டோர் நாட்டை
   ஆளுகின்ற பொறுப்பேற்பார்; நம்மை நோக்கி
வரவிலையே காற்றெனவே ஏங்கி நிற்போர்
   வாழ்க்கையெலாம் ஏக்கத்தில் கழிப்பார்; ஐந்து
வருடத்திற் கொருமுறையோர் புயல டிக்கும்;
   வீதிதொறும் பெருமுழக்காய் இடியி டிக்கும்;
சிறுதூற்றல் சில்லரையாய்க் குடிசைப் பக்கம்
   சிந்திவரும்; தென்றலெனப் பேச்சு வீசும்;
            ( இதெல்லாம் எதற்காக )
வாக்குண்டாம்; மணமுண்டாம்; பெரிய வர்கள்
   வரவுண்டாம்; உரையுண்டாம்; குடிசைக் கெல்லாம்
வாக்கில்லை யெனிலிங்கோ மணமு மில்லை;
   வரவுமில்லை; பைத்தியமா? பயனே யின்றி
வாக்கில்லா மக்களுடன் பேசப்; பின்னர்
   வருகின்ற தேர்தலுமே முடிந்து போனால்
வாக்களித்த பெரியோர்கள் இறைவ னாவார்;
   வாக்காளர் தவங்கிடக்கும் அடியா ராவார்.

             உயர்ந்த திறமை

நம்முன்னோர் திறமையிலே குறைந்தா போனார்?
   நானிலத்தில் நாகரிகம் பரவா முன்பே
நம்முன்னோர் கலைகளிலே நிமிர்ந்து நின்றார்;
   நாலுவகைத் திறமையிலும் உயர்ந்து நின்றார்;
நம்முன்னோர் காலம்பொற் காலம்; எல்லா
   நுண்கலையும் ஈடில்லா தொளிர்ந்த காலம்;
அம்முன்னோர் பெருமையினை அளந்து காட்டி
   அளப்பரிய ஆண்டுகளாய்க் கலைகள் நிற்கும்.

வானெட்டிப் பார்க்கின்ற கோபு ரத்தின்
   வகையெட்டிப் பார்த்திட்டால் வியப்பு மீறும்;
ஏனெட்டி உலகாளும் வாய்ப்பை இந்த
   இனமெட்டிப் பெறவில்லை? என்ற கேள்வி
தானெட்டி மனதிலெழும்; இலக்கி யத்தின்
   திறமெட்டிச் சுவைத்தாலும் அதுவே தோன்றும்;
ஏனெட்டி உயரவில்லை? காலத் தோடே
   இனமெட்டி வளரவில்லை; அவ்வ ளவ்வே.

திறமைகளோ பலவிதமாம்; தீயைப் போலச்
   செய்வதற்கும் அழிப்பதற்கும் துணையாய் நிற்கும்
திறமையினை நாம்வளர்க்க வேண்டும்; அந்தத்
   திறமையினால் பிறரழித்துத் தானே வாழும்
திறமிங்கே தோன்றாமல் இருக்க வேண்டும்;
   தினந்தோறும் உரையாடும் போதும் பேசி
உறவாடுங் காலத்தும் நம்மைக் காக்கும்
   ஒப்பரிய திறமையுரு வாக வேண்டும்.



No comments:

Post a Comment