Tuesday, September 24, 2013

kuzhanthai

           குழந்தை

பஞ்சுக் காவியம்; பனிமலர் ஓவியம்;
நெஞ்சுக்குள் மாயம் நிகழ்த்துமொரு சூத்திரம்;

கல்லைக் கனியாக்கும் கண்வீச்சு; பொருளற்ற
சொல்லைச் சுழற்றிநமைச் சொக்கவைக்கும் மாமாயம்;

இதழசைந்தால் காணும் இதயங்கள் கூத்தாடும்;
மதலையின் ஒலிக்கூட்டில் மனமயங்கிச் சுற்றிவரும்;

வஞ்சங்கள்; சூழ்ச்சிகள்; வாழ்க்கையின் மேடுபள்ளம்
கொஞ்சமும் தாக்காமல் கூத்தாடும் சிறுபிஞ்சு;

தாய்மை என்னுமொரு தனியுயர்வைப் பெண்ணுக்குத்
தூய்மை யுடனளிக்கும் தனிமகிழ்ச்சிக் கருவூலம்;

இப்படி எத்தனையோ அடுக்கடுக்காய்ப் பாடினாலும்
எப்படி யும்பாடி முடிக்கவொண்ணாப் பெரும்பொருளாம்;

இதுதானே குழந்தை! சமுதாயப் பெருமண்ணில்
அதுதானே மனிதனாய் அவதாரம் எடுக்கிறது;

மனிதனாய் மாறியபின் கண்ணசைவும் காலசைவும்
இனிக்கிறதா? இங்கேதான் ஏதோ இடிக்கிறதே!

அதேஓர் குழந்தையை அப்படியே வளர்க்காமல்
எதையோ திணித்ததனை என்னவோ ஆக்குகிறோம்;

அந்தக் கதையெதற்கு? அணுஅணுவாய் இன்பத்தை
இந்த உலகத்தில் ஈயுமதைப் போற்றுவோமே!

குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான்; அதுவிங்கே
குழந்தை குழந்தையாக இருக்கும் வரையில்தான்;

குழந்தையைப் பாடுவோம்; குழந்தைக்காய்ப் பாடுவோம்;
குழந்தையுள்ளம் கொடுத்திடுவாய்! என்றிறையை வேண்டுவோம். 

No comments:

Post a Comment