Friday, October 13, 2023

அஞ்சுகின்றேன்

      
             
       அஞ்சுகின்றேன்.

பல்லினில் விடத்தைக் கொண்ட
   பாம்பினுக் கஞ்சேன்; என்றும்
அல்லினில் ஆட்டம் போடும்
   அலகைகட் கஞ்சேன்; சொல்லும்
சொல்லினில் தேனும், செய்யும்
   செயலினில் நஞ்சுங் கொண்டே
நல்லவர் போல்ந டிக்கும்
   நட்பினுக் கஞ்சு கின்றேன்.      1

கடித்திடப் பாய்ந்து தாவும்
   கடுவனுக் கஞ்சேன்; வானில்
இடித்திடும் இடியென் மேலே
   இறங்கினும் அஞ்சேன்; நன்கு
பொடித்திடப் பாவந் தன்னைப்
   புலம்பிடு போதும் அங்கே
நடித்திடும் மனித னுக்கு
   நாளுமே அஞ்சு கின்றேன்.      2

தொட்டதும் கொட்டும் தேளின்
   கொடுக்கினை அஞ்சேன்; ஏதும்
பட்டதும் படமெ டுக்கும்
   பாம்பினை அஞ்சேன்; தன்னைத்
தொட்டதைச் சுட்டுத் தீய்க்கும்
   தீயினை அஞ்சேன்; என்னைக்
கட்டியே அணைப்பார் வஞ்சக்
   கரவினை அஞ்சு கின்றேன்.     3


தும்பினை அறுத்துத் தள்ளித்
   துள்ளியே திரியுங் காளைக்
கொம்பினை அஞ்சேன்; கொம்பின்
   கூரினை அஞ்சேன்; உள்ளம்
நம்பியே நான ணைத்த
   நல்லவர் எய்யும் வெய்ய
அம்பினுக் கஞ்சி நெஞ்சம்
  அழுதிட வெம்பு கின்றேன்.        4

எட்டியே உதைத்துத் தள்ளும்
   இரண்டுகால் அஞ்சேன்; வாழ்வில்
மட்டிலா இடர்கள் ஈயும்
   மாற்றலர்க் கஞ்சேன்; என்னைக்
கட்டியே பிணைத்து வாழ்ந்து
   கணக்கிலா இன்பந் தன்னைக்
கொட்டியே தந்தாள் சின்னக்
   கோபமே அஞ்சு கின்றேன்.       5

காற்றுடை வேக மஞ்சேன்;
   கடும்புயல் வெள்ள மஞ்சேன்;
தூற்றிடு பகைவ ரஞ்சேன்;
   தொடர்ந்திடு பழியை யஞ்சேன்;
ஏற்றெனை நண்ப ராக
   இழைந்தவர் எனக்குப் பின்னால்
தூற்றிடு பொல்லாச் சொல்லின்
   சூட்டினை அஞ்சுகி ன்றேன்.       6



வறுமையின் கொடுமை யஞ்சேன்;
   வாட்டிடு துன்ப மஞ்சேன்;
வெறுமையின் நிலைமை யஞ்சேன்;
   விரட்டிடு பேய்க ளஞ்சேன்;
அருமையாய்ப் புகழும் நண்பர்
   அகத்தினில் உள்ள வஞ்சச்
சிறுமையைக் கண்டே நாளும்
   சிந்தையா லஞ்சு கின்றேன்.       7

மட்டுவார் குழலு மஞ்சேன்;
   மயக்கிடும் விழிக ளஞ்சேன்;
கட்டியே இழுக்குங் காந்தக்
   கயல்விழிப் பாய்ச்ச லஞ்சேன்;
கட்டிய மனையாள் வாயின்
   கடையிதழ் உதிரு கின்ற
கட்டிலா இனிய சொல்லின்
   குளுமையை அஞ்சு கின்றேன்.     8

இறைவனே அளிக்கு மந்த
   இன்னலின் வரிசை யஞ்சேன்;
கறையணி கண்டன் கோபக்
   கனலினுக் கஞ்சேன்; அந்த
இறைவனின் முன்னால் நின்றே
   இருகைகள் கூப்பும் போதும்
கறையுள நெஞ்சங் கண்டே
   கணமெலாம் அஞ்சு கின்றேன்.     9



அஞ்சுதல் வேண்டு மென்பேன்;
   அரற்றுதல் வேண்டு மென்பேன்;
கெஞ்சுதல் வேண்டு மென்பேன்;
   கோபமும் வேண்டு மென்பேன்;
அஞ்சிட வேண்டு தற்கே
   அஞ்சலும், தேவை யின்றி
அஞ்சிடாத் துணிவும் என்னுள்
   ஆக்கிட வேண்டு கின்றேன்..        10


பல்லினில் விடத்தைக் கொண்ட
   பாம்பினுக் கஞ்சேன்; என்றும்
அல்லினில் ஆட்டம் போடும்
   அலகைகட் கஞ்சேன்; சொல்லும்
சொல்லினில் தேனும், செய்யும்
   செயலினில் நஞ்சுங் கொண்டே
நல்லவர் போல்ந டிக்கும்
   நட்பினுக் கஞ்சு கின்றேன்.      1

கடித்திடப் பாய்ந்து தாவும்
   கடுவனுக் கஞ்சேன்; வானில்
இடித்திடும் இடியென் மேலே
   இறங்கினும் அஞ்சேன்; நன்கு
பொடித்திடப் பாவந் தன்னைப்
   புலம்பிடு போதும் அங்கே
நடித்திடும் மனித னுக்கு
   நாளுமே அஞ்சு கின்றேன்.      2

தொட்டதும் கொட்டும் தேளின்
   கொடுக்கினை அஞ்சேன்; ஏதும்
பட்டதும் படமெ டுக்கும்
   பாம்பினை அஞ்சேன்; தன்னைத்
தொட்டதைச் சுட்டுத் தீய்க்கும்
   தீயினை அஞ்சேன்; என்னைக்
கட்டியே அணைப்பார் வஞ்சக்
   கரவினை அஞ்சு கின்றேன்.     3


தும்பினை அறுத்துத் தள்ளித்
   துள்ளியே திரியுங் காளைக்
கொம்பினை அஞ்சேன்; கொம்பின்
   கூரினை அஞ்சேன்; உள்ளம்
நம்பியே நான ணைத்த
   நல்லவர் எய்யும் வெய்ய
அம்பினுக் கஞ்சி நெஞ்சம்
  அழுதிட வெம்பு கின்றேன்.        4

எட்டியே உதைத்துத் தள்ளும்
   இரண்டுகால் அஞ்சேன்; வாழ்வில்
மட்டிலா இடர்கள் ஈயும்
   மாற்றலர்க் கஞ்சேன்; என்னைக்
கட்டியே பிணைத்து வாழ்ந்து
   கணக்கிலா இன்பந் தன்னைக்
கொட்டியே தந்தாள் சின்னக்
   கோபமே அஞ்சு கின்றேன்.       5

காற்றுடை வேக மஞ்சேன்;
   கடும்புயல் வெள்ள மஞ்சேன்;
தூற்றிடு பகைவ ரஞ்சேன்;
   தொடர்ந்திடு பழியை யஞ்சேன்;
ஏற்றெனை நண்ப ராக
   இழைந்தவர் எனக்குப் பின்னால்
தூற்றிடு பொல்லாச் சொல்லின்
   சூட்டினை அஞ்சுகி ன்றேன்.       6



வறுமையின் கொடுமை யஞ்சேன்;
   வாட்டிடு துன்ப மஞ்சேன்;
வெறுமையின் நிலைமை யஞ்சேன்;
   விரட்டிடு பேய்க ளஞ்சேன்;
அருமையாய்ப் புகழும் நண்பர்
   அகத்தினில் உள்ள வஞ்சச்
சிறுமையைக் கண்டே நாளும்
   சிந்தையா லஞ்சு கின்றேன்.       7

மட்டுவார் குழலு மஞ்சேன்;
   மயக்கிடும் விழிக ளஞ்சேன்;
கட்டியே இழுக்குங் காந்தக்
   கயல்விழிப் பாய்ச்ச லஞ்சேன்;
கட்டிய மனையாள் வாயின்
   கடையிதழ் உதிரு கின்ற
கட்டிலா இனிய சொல்லின்
   குளுமையை அஞ்சு கின்றேன்.     8

இறைவனே அளிக்கு மந்த
   இன்னலின் வரிசை யஞ்சேன்;
கறையணி கண்டன் கோபக்
   கனலினுக் கஞ்சேன்; அந்த
இறைவனின் முன்னால் நின்றே
   இருகைகள் கூப்பும் போதும்
கறையுள நெஞ்சங் கண்டே
   கணமெலாம் அஞ்சு கின்றேன்.     9



அஞ்சுதல் வேண்டு மென்பேன்;
   அரற்றுதல் வேண்டு மென்பேன்;
கெஞ்சுதல் வேண்டு மென்பேன்;
   கோபமும் வேண்டு மென்பேன்;
அஞ்சிட வேண்டு தற்கே
   அஞ்சலும், தேவை யின்றி
அஞ்சிடாத் துணிவும் என்னுள்
   ஆக்கிட வேண்டு கின்றேன்..        10

No comments:

Post a Comment