Friday, October 13, 2023

அறுமுகன் வருகை

 சிந்திக்கும் நெஞ்சத்துள் தித்திக்கத் தித்திக்கத்

   திகழ்கின்ற மலைக்கொழுந்தே!

 சிந்தனையி லுனையன்றிச் சிறக்கின்ற வேறுபொருள்

   தினமும்நான் உணர்வதில்லை;

நிந்திக்கும் பெருங்கூட்ட நெருக்கடியில் வாழ்கின்றேன்;

   நித்தமுமே வாடுகின்றேன்;

 நினைப்புக்கும் செயலுக்கும் யாதுமொரு தொடர்பில்லா

   நேயரையே கூடுகின்றேன்;

வந்திக்கும் நிறைபொருளா யிளையவனே! உனையேநான்

   வாழ்நாளில் தேடுகின்றேன்;

 வாடுகிற கணந்தோறும் மலருகிற உன்மேனி

   வடிவழகைப் பாடுகின்றேன்;

செந்தமிழின் பாட்டிலொரு சுவைக்கூட்டாய்த் திகழுகின்ற

   சேயவனே! வருகவேநீ!

 திகழ்குன்றக் குடிமலையில் சிறப்பாக விளையாடித்

   திரிகுமர! வருகவேநீ!


துன்பங்கள் கணந்தோறும் எனைவந்து தாக்கியேஎன்

   சிந்தையைக் கலக்கிநிற்கும்;

 தொலையாத இடர்பலவும் அலையாக வீசியெனைத்

   துரும்பாக அலைக்கழிக்கும்;

இன்பத்தின் நிழல்கூட எனைவந்து தொடுவதில்லை

   எனையேனோ புறக்கணிக்கும்;

 இதயத்தில் பலவான பொல்லாத பேய்க்கூட்டம்

   எப்போதும் ஆர்ப்பரிக்கும்;

கண்பாவச் செயல்காணும்; கைபாவச் செயல்செய்யும்;

   கால்பாவ வழிநடக்கும்;

 காதுகளும் பாவத்தின் குரல்கேட்டே மகிழ்ந்திருக்கும்;

   கடும்பாவம் எனைநடத்தும்;

மென்பாவை வள்ளிமயில் விளையாடு தோளழகா!

   முருகான வாவருக!

 முந்துகிற புகழ்கண்ட குன்றத்தின் மேலமர்ந்த

   முத்தான வாவருக!


நாள்தோறும் எனைநாடும் நண்பர்தம் கூட்டத்தில்

   நாடகமே காணுகின்றேன்;

 நெஞ்சிலொரு நினைப்பாகி நாவிலொரு சொல்லாகி

   நடக்கின்றார் நாணுகின்றேன்;

தோள்தழுவி உறவாடும் தோழனேஎன் பின்னிருந்து

   தொல்லைதர வாடுகின்றேன்;

 தூய்மையொடு வாய்மையின் தடங்கூடத் தெரியவில்லை

   தொலைதூரம் தேடுகின்றேன்;

நாள்பலவும் கழிகிறது; நெஞ்சமோஉள் அழுகிறது;

   நல்லகதி வேண்டுகின்றேன்;

 நாட்டிலது கிடைக்குமெனும் நம்பிக்கை எனக்கில்லை;

   நெஞ்சுறுதி தளருகின்றேன்;

வேல்தாங்கி வந்தென்றன் வேதனைகள் ஒழித்திடவே

   வேலவனே! வருகவேநீ!

 மயில்தாங்கி நடந்துவர வளைதாங்கு மயிலோடு

   மால்மருக னேவருகவே!


அறியாமை தனில்மூழ்கிக் கிடக்கின்றார் பாமரர்கள்;

   அவர்கள்தம் தலையிலேயே

 அருமையுடன் மிளகாயை அரைக்கின்றார்; தலைகொடுத்தோர்

   அகமகிழ்ந்து திளைக்கின்றார்;

தெரியாமல் கேட்கின்றேன்; தலையெரிச்சல் தெரியாத

   திறமென்ன திறமதுவோ!

 தெரிந்தாலும் சரியென்று கும்பிட்டுப் பணிசெய்யும்

   செயலென்ன செயலதுவோ!

அறிவுறுத்த முயல்பவரை அச்சுறுத்த முயல்கின்றார்;

   அடிப்பதற்கும் அஞ்சவில்லை;

 அறுமுகனே! சூரரினை அழிக்கவேநீ முனைந்துவந்தால்

   அடியவரே எதிர்ப்படுவார்;

புரியாத நல்லமனப் போக்குகளே புரிந்துசெயப்

   பொன்மயிலு டன்வருக!

 புகழேறு குடியதனில் மலையேறி நிற்கின்ற

   புண்ணியனே வருகவேநீ!


பொல்லாத மனமென்னைப் பாடாகப் படுத்திநாளும்

   போகாத இடம்செலுத்தும்;

 புரியாத அறிவென்னைப் பெருங்குழப்பந் தனிலாழ்த்திப்

   பொல்லாங்கில் மூழ்குவிக்கும்;

இல்லாத ஆசையெல்லாம் என்னென்ன வோஎழுந்தே

   என்னெஞ்சில் புயலெழுப்பும்;

 என்றைக்கும் நனவாகாக் கனவுகளே என்வாழ்வின்

   ஏக்கமென நிறைந்திருக்கும்;

செல்லாத நெறிசெலுத்தும் சபலங்கள் தேரேறித்

   திசையெல்லாம் ஓடிநிற்கும்;

 செய்வதொன்றும் புரியாமல் திசைவழிகள் தெரியாமல்

   திண்டாடி வீழ்ந்துநிற்பேன்;

கல்லாத எனக்குவழி காட்டிடவே மயிலேறிக்

   காற்றாக வருகவேநீ!

 கலைநிலவு குடியதனில் மலைநிலவி யுயர்ந்துள்ள

   கலைமணியே வருகவேநீ!


பொருள்செய்யும் வழியறியா திவ்வுலகில் நாள்தோறும்

   புண்பட்டு வாடுகின்றேன்;

 பொழுதொன்றும் பொருளின்றிப் போகாத தையுணர்ந்தே

   புலம்பியேநான் ஓடுகின்றேன்;

பொருளுக்கும் நான்கற்ற கல்விக்கும் சற்றுமொரு

   பொருத்தமுமே காணவில்லை;

 பொருள்கூடாக் கற்றவரைப் பூனையுமே மதிப்பதில்லை;

   புவியினிலோர் உயர்வுமில்லை;

மருள்போகக் கற்றவனைப் பொருள்சேர்க்கக் கற்குமொரு

   வழிகாட்டி அருளவேண்டும்;

 வாராத இடரேதும் வந்தாலே நீவந்து

   வாரியணைத் தெடுக்கவேண்டும்;

அருள்தோகை விரித்தமயில் அழகுவள்ளி யுடனாக

   அப்பப்ப! வருகவேநீ!

 அருங்குன்றக் குடியிலுயர் பெருங்குன்றி லாடுகின்ற

   அழகழகா! வருகவேநீ!


எத்தனையோ துன்பங்கள்; எத்தனையோ துயரங்கள்;

   எத்தனையோ மனஉளைச்சல்;

 எத்தனையோ பேராசை; எத்தனையோ மனஓசை;

   எத்தனையோ நெஞ்செரிச்சல்;

எத்தனையோ மனவீழ்ச்சி; எத்தனையோ மனத்தளர்ச்சி;

   எத்தனையோ பேரிகழ்ச்சி

 எத்தனையோ நடிப்பலைகள்; எத்தனையோ இடிப்பலைகள்;

   எத்தனையோ துடிப்பலைகள்;

இத்தனையும் நான்தாங்கி இவ்வுலகில் வாழ்ந்திடஎன்

   இதயத்தில் வலிமையில்லை;

 எனைக்கூட்டி யணைத்தெனக்கோர் வழிகாட்டி நடத்தியெனக்

   கென்றும்நீ அருளவேண்டும்.

இத்தரையில் வந்துகுற வள்ளிமயில் மணந்தவனே!

   எழில்முருக னேவருக!

 எழிலான குடிதன்னில் உயர்வான மலைவாழும்

   இளையவனே! வருகவேநீ!;

No comments:

Post a Comment