Friday, October 13, 2023

ஆராரோ ( பெண்குழந்தைக்கு )

                           


   ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ


ஆசையிளங் கிளிமொழியே ! அற்புதமே! கையாட்டிப்

பேசுகின்ற  சிற்பமே!என்  பேரழகே!  தாலேலோ!


மண்ணில்நீ பிறந்ததுமே என்மனதில் இறக்கைகட்டி

விண்ணில்நான் பறந்துநின்றேன்; வெண்ணிலவின் தலைமிதித்தேன்;


பொற்பாவை போலழகுப் பொலிவுடன்நீ வளர்கையிலே

அற்பமனச் சமுதாய அலங்கோலம்  உறுத்திடுதே!


நீமலர்ந்து மணக்குங்கால் என்மனதில் ஏதேதோ

தீமலர்ந்து சிந்தையினைச் சுட்டெரித்து நிற்கிறதே!


நடையழகு பண்பழகு பார்க்காமல் சீதனத்தின்

எடையழகு பார்க்குமந்த இளைஞர்க்கே அஞ்சிடுதே!


வேலியே பயிரைமேயும் வெங்கொடுமைச் சூழலிலே

தாலிக்குக் காப்பில்லை; தங்கமேநான் நடுங்குகிறேன்.


சீராட்டித் தாலாட்டிச் செல்வமுனைக் கொஞ்சுங்கால்

போராட்ட நினைப்புநெஞ்சை முள்ளாய்க் கிழிக்கிறதே!


பாலியலின் கொடுமையினால் பாதிக்கப் படுகின்ற

வேல்விழியின் விதியெண்ணி மனம்நடுங்கி அழுகிறதே!


முள்மீது விழுந்தாலும் முள்ளிதன்மேல் விழுந்தாலும்

உள்ளபடி சேலைதானே உருச்சிதைந்து கிழிகிறது.


உனையெண்ணி மகிழ்வேனா? ஊரெண்ணி நடுங்குவேனா?

வினையெண்ணி உனைவீணே வீதிவழி விடுவேனா?


கண்ணேஎன் கண்மணியே! கவலையின்றிக் கண்ணுறங்கு!

கண்ணுறங்க மாட்டாமல் கலங்கஎன்னை விட்டுவிடு!

ஆராரோ உனைக்காப்பார்? ஆராரோ கைப்பிடிப்பார்?

ஆராரோ துணைவருவார்? ஆராரோ ஆரிரரோ!

No comments:

Post a Comment