Friday, October 13, 2023

அதுவே சோலை

 புயலைச் சிறுசிமிழில் அடைத்தே - காலைப்

பனியை அதிற்குழைத்துப் போட்டே

அயலே இருப்பவர்க்கே அளித்தேன் - அவர்

 ஆகா இதுஇனிமை என்றார்.


வேம்பின் காயரைத்துப் போட்டே - அதில்

  மெல்லிசைச் சொல்லடுக்கிச் சேர்த்தே

வீம்பிலாச் சுவைஞரிடம் தந்தேன் - அவர்

மிதக்கிறோம் தேனாற்றில் என்றார்.


தென்றலைச் சிறைப்பிடித்தே வந்து - கீற்றுத்

தென்னைச் சலசலப்பைச் சேர்த்து

முன்றிலில் உலவிவரச் செய்தேன் - ஆகா

மூளு மிதுகவிதை என்றார்.


தீயின் நாக்குளிரச் செய்தே - அதில்

சிறகுடன் கற்பனைகள் போட்டேன்

தீயின் சுடர்நடுவே சுவைகள் - கண்டே

சிறந்த கவிதைஇதோ என்றார்.


இரவின் விண்மீன்கள் பறித்தே - அவற்றுக்

கெழிலுற வேசந்தம் சேர்த்துக்

குறைவிலாத் தோரணமாய்ச் செய்தேன் -அதைக்

கவிதை வானமென்றே சொன்னார்.


தீமைச் சிறகுகளைக் கொய்தே - அவற்றைத்

தூய கவிநெருப்பில் போட்டேன்

தீமை எரிந்திடவே யில்லை - என்னைத்

தின்றிட முயல்வதைநான் பார்த்தேன்


ஊழற் புற்றுநோய்ப்பூ தமேயிந் - நாட்டின்

ஊனத் தின்காரண மென்றேன்

ஆழக் கிழங்கையகழ்ந் தெடுக்க - இங்கே

ஆரும் முனைந்திடவே காணோம்.

 

என்னைத் தான்பலரும் முறைத்தார் - கவிஞன்

இவனுக் கேனிக்கொழுப் பென்றார்

வண்ணக் கவியுனக்குப் போதும் - தீமை

 வகையுணர் பார்வைவேண்டா மென்றார்.


என்னநான் இப்பொழுது  செய்ய? - கால

இருப்பினைக் காட்டுதலே தப்பா?

கண்ணா  டிதானிங்கே கவிதை - என்னும்

கருத்தெலாம் ஒதுக்கிவிட்டா பாட?


அப்படி ஒருகவியே வேண்டாம்! - செல்வ

அணிவகுப் பும்விருதுமே வேண்டாம்

இப்படி யேபாடித் திரிவேன் - கிடைப்ப

திடுகா டேயெனினு மதுசோலை.


No comments:

Post a Comment