Friday, October 13, 2023

இரு நோக்கு

அய்யோ பாவம்! அவன்பாடு பெரும்பாடு.

மெய்யோ இளைக்கிறது; மனமோ தவிக்கிறது.

துள்ளித் திரிகாளை தோற்றப் பொலிவிழந்து

உள்ளத்துப் பெருஞ்சுமையால் ஒடிந்து நைகிறான்.

கண்ணுறங்க மறுக்கிறது; கனவுகளோ வண்ணமயம்;

எண்ணம்நோய்ப் பட்டதுபோல் இதயமெலாம் பெருங்குழப்பம்.

என்ன நடந்தது ?

ஒன்றுமில்லை; அவளையவன் கண்டான்; கருத்திழந்தான்;

கண்கள் ஒன்றையொன்று கவ்விக் கலந்தன.

சென்றாள்; ஆனால் மனம்விட்டுச் செல்லவில்லை.

நின்று நிதானமாய் உள்ளிருந்து வதைக்கிறாள்.

நோயாளி இவனானான்; நோயை அவள்தந்தாள்.

நோயின் கொடுமையைத் தீர்க்கும் மருந்தென்ன ?

இப்போது தான்நமக் கொன்று புரிகிறது.

எப்போதோ கேட்டோமே  முள்ளெடுக்கும் வழியினை.!

முள்ளை எடுக்கவொரு முள்தான் தேவையெனில்

கள்ளி யவள்பார்வை கட்டாயம் தேவைதானே !

ஆனால் இங்கோ ஒருபுதுமை; அவள்பார்வை

தேனா ? தேளா ? நோய்தந்த ததுதானே !

ஒருநோக்கு நோய்தரும்; இன்னொரு வகைப்பட்ட

மறுநோக்கோ மருந்தாகி நோயினைத் தீர்த்துநிற்கும்.

இந்த இருவகை நோக்கும் அவளுக்கே

சொந்த மெனச்சொல்லி மகிழ்வை ஊட்டுகிறான்.


“ இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

  நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.”

         --குறிப்பறிதல்--1091   

No comments:

Post a Comment