Tuesday, January 24, 2012

கண்முன் நிலா;கற்பனை உலா


கண்ணில் தெரிகிற நிலவு வந்தே
  கைப்பட மாட்டாதோ?-அட
விண்ணில் திரிகிற மீன்கள் மடியில்
  வீழ்ந்திட மாட்டாவோ?

சோலை தவழ்ந்திடு தென்ற்ல் அதுநம்
  சொல்லினைக் கேட்காதோ?-எந்த
வேளை வேண்டினும் வந்தே நம்முடல்
  மெல்லெனத் தடவாதோ?

காட்டில் திரிந்திடு புலிநரி அவைநம்
  கட்டளை கேட்காவோ?-இந்த
நாட்டு மனிதரில் யாரவை யாரென
  நம்மிடம் உரைக்காவோ?

காற்று வெளியெலாம் நம்செவி வந்தே
  கதைகள் நவிலாவோ?-இங்கே
நேற்றும் நாளையும் இன்றும் நமதென
  நாட்டியம் புரியாவோ?

கண்ணில் தெரிகிற உயிரெலாம் உறவெனக்
  கருத்துள் பதியாதோ?-சிந்தை
எண்ண ஒளிக்கடல் நீந்தித் திளைத்தே
  இன்பம் அடையாதோ?

கதிரும் நிலவும் உறவென வந்து
  கலந்து மகிழாவோ?-அட
எதிரும் புதிருமே இல்லா உலகம்
  இங்கு மலராதோ?

கண்ணில் ஒருநிலா கற்பனை ஆயிரம்
  காட்சி விரியாதோ?-அட
எண்ணிப் பாரடா என்ன உன்னுளே
  இலையென இடிக்காவோ?

கண்ணில் தெரிந்திடு காட்சிகள் நந்தம்
  கற்பனை தூண்டாவோ?-நம்
எண்ணம் ஆயிரம் ஆயிரம் சிட்டாய்
  எங்கணும் பறக்காவோ?

நானும் நீயும் அவனும் அவளும்
  நடமிடும் ஆன்மாவே!-அந்த
வானும் நிலவும் வெளியும் ஆன்மா
  ஆடிடு களந்தானே!

கண்ணில் தெரிகிற நிலவே உன்றன்
  கருத்துள் நுழையட்டும்-அந்த
விண்ணில் தவழ்ந்திடு கோள்க ளனைத்தும்
  மனத்துள் தவழட்டும்

No comments:

Post a Comment