Friday, January 13, 2012

கூத்து


காலமெனும் மேடையிலே
கோலமிட்டு வேடமிட்டுக்
காட்டுகிறோம் நாம்பலவாய் வித்தை-ஆய்ந்து
கூட்டிடிலோ அத்துணையும் சொத்தை

காதலென்றும் மோகமென்றும்
காதலின்றேல் சாதலென்றும்
கதறுகிறார் இளைஞரெல்லாம் இங்கே-அந்தக்
காதலெல்லாம் ஓய்ந்தபின்னர் எங்கே?

மாடுமனை வீடுமக்கள்
கூடுகின்ற மக்களெலாம்
மாட்சியுள்ள போதிருப்பார் கூடி-நாம்
வீழ்ச்சியுற்றால் பறந்திடுவார் ஓடி

செத்தபிணம் தனைச்சுற்றிக்
கத்தைகத்தை யாய்மாலை
சாத்துகிறார் போர்த்துகிறார் ஆடை-நாளும்
சாம்பிணத்துக் கேதுமில்லை ஆடை

வறுமையென்றும் ஒழிப்பென்றும்
வகைவகையாய்க் கொள்கைகளை
வகுத்துரைத்து வாக்குவாங்கிச் செல்வார்-அவர்
வென்றபின்னே ஏழைபக்கம் நில்லார்

யாரிடத்தில் யார்தஞ்சம்
யாரொடுயார் கூட்டணியாம்
நாட்டிலொரு பெருங்கூத்தே நடக்கும்-என்று
நாட்டுமக்கள் அக்கூத்தை முடிக்கும்?

No comments:

Post a Comment